10 நாளுக்கு பிறகு தொகுதி வாரியாக முழு விவரம் வெளியீடு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 4,87,98,833 வாக்குகள் பதிவு: அரசியல் கட்சிகள் அழுத்தத்திற்கு பிறகு நடவடிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து 10 நாட்களுக்கு பிறகு அரசியல் கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக தேர்தல் ஆணையம் தொகுதி வாரியான வாக்குப்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 4,87,98,833 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடந்தது. 4 முனைப்போட்டி நிலவிய இந்த தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்த நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

அன்றைய தினத்தின் இறுதியில் வாக்குப்பதிவு 85.15 சதவீதமாக இருந்தது. 2 நாட்களுக்கு பிறகு, மறு சரிபார்ப்பிற்கு பின் இந்த தற்காலிக சதவீதத்தை 85.10 சதவீதமாக (0.05% குறைவு) ஆணையம் திருத்தியது. அதே சமயம், பாலின வாரியான விவரங்களையோ (ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்) அல்லது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையையோ அதிகாரிகள் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதனால் பொறுமையை இழந்த தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினர். குறிப்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போன்றோர் சட்டமன்ற தேர்தலுக்கான முழுமையான வாக்குப்பதிவு தரவுகளை வழங்காமல் இருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும், பீகாரில் கடந்தாண்டு இரண்டு கட்டமாக நடந்த சட்டமன்ற தேர்தலில் 24 மணி நேரத்தில் தொகுதிவாரியான பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம், தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மட்டும் வாக்குப்பதிவு முழு விவரத்தை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும், காலம் தாழ்த்தி வெளியிடப்படும் தரவுகளில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளோம் என அறைகூவல் விடுத்திருந்தார். இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்து 10 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில் 85.10 சதவீதம் வாக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதிவான வாக்குகள் 4,87,98,833. இவர்களில் ஆண்கள் 2,35,34,720, பெண்கள் 2,52,59,596. மூன்றாம் பாலினத்தவர் 4517.

அதேபோல் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவீதமும் வெளியிடப்பட்டுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக தொகுதி வாரியான இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தாலும், இத்தனை நாட்கள் கால தாமதம் ஏன் என கேள்வியை எழுப்பியுள்ளன. தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து ஏஐ காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நிலையில் வாக்குப்பதிவு இறுதி அறிவிப்பை வெளியிட 10 நாட்களை எடுத்துக்கொண்டது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையின்மையை காட்டுவதாக சாடியுள்ளனர்.

மேலும் இலங்கை, பிரிட்டன், வங்கதேசம், நைஜீரியா, மெக்சிகோ, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் காலை வாக்குப்பதிவு நடந்து மாலையே வாக்கு எண்ணிக்கை நடந்து வெற்றி தோல்விகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், உலகில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை அடையாளப்படுத்தி கொண்டாலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் பண்டைய கால நடைமுறையே பின்பற்றி வருவது தேர்தல் ஆணையத்தின் தோல்வியை காட்டுகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: