உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த விதிகளை வகுத்து அறிவிக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் தேவையான விதிகளை வகுத்து அறிவிக்க கோரிய மனுவுக்கு எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை அமல்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்கக் கோரி தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் மற்றும் மூன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டப்படி பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த பின்பு பணியில் சேர்ந்து 2026ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தங்களுக்கு புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சிறப்பு கருணை ஓய்வூதியம் பெற தகுதி உள்ளது.ஆனால், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இதுவரை, விதிகளோ, செயல்பாட்டு நெறிமுறைகளோ வகுக்கப்படவில்லை. எனவே, விதிகள், செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: