சென்னையின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புழல் ஏரியை வந்தடைந்தது

புழல்: சென்னையின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புழல் ஏரியை நேற்று வந்தடைந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வழங்குவதில் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. தற்போது, கோடை காலம் தொடங்கிய நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து நீர் வற்றி வீணாவதை தவிர்க்கும் வகையில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் புழல் ஏரியை நேற்று வந்தடைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு புழல் ஏரிக்கு மீண்டும் 260 கன அடி நீர்வரத்து வரத் தொடங்கியது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2002 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 14.75 அடி உயரத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. 260 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 459 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 11.19 அடி உயரத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. புழல் ஏரிக்கு திறக்கப்பட்டு வந்த நீர் 225 கன அடியில் இருந்து 340 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து ஏதும் இல்லை. கோடைக்காலம் சுட்டெரித்து வரக்கூடிய நிலையில் நீர் வற்றி தண்ணீர் வீணாவதை தவிர்க்கும் வகையில் சோழவரம் ஏரி நீர் புழல் ஏரிக்கு கொண்டு சென்று பயன்படுத்தப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: