திண்டுக்கல், மே 1: திண்டுக்கல் பேகம்பூரில் குடிநீர் விநியோகிக்க கோரி கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் பேகம்பூர் பூச்சி நாயக்கன்பட்டி, கவுண்டர் சத்திரம் தெரு, சிக்கந்தர் சாகிப் தெரு உள்ளிட்ட பேகம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக குடி தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் பேகம்பூர் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
