கடையம், மே 1: முப்பது ஆண்டுகளுக்கு பிறகு கோரக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை, கடனாநதி வனப்பகுதியில் அமைந்துள்ள கோரக்கநாதர் கோயில் மற்றும் அனுசுயா பரமேஸ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வரர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 28ம்தேதி காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமமும், பூர்ணாஹூதியும், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனத்தை தொடர்ந்து முதல்கால யாக பூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 2ம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும், இரவு யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, சுவாமிக்குக் காப்பு கட்டுதல், யாத்ரா தானத்தைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு கடம் எழுந்தருளி கோயில் விமானம், அனுசுயா பரமேஸ்வரி அம்பிகா உடனுறை அத்ரி பரமேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அவரது மனைவி சந்திரா மற்றும் கடையம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், அம்பை, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
