அம்பையில் பிரசவத்தில் தாய், குழந்தை உயிரிழப்பு

அம்பை, மே1: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சம்பன்குளத்தைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி ஜன்னத்து நிஷா(21). நிறைமாத கர்ப்பிணியான இவர் அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 27ம்தேதி காலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. இந்நிலையில் தாய் ஜன்னத்து நிஷாவிற்கும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை அம்பையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து, வரும் வழியிலேயே ஜன்னத்து நிஷாவும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதாக முகமது யூசுப் தரப்பினர் தெரிவித்தனர். ஆனால் நெல்லை மருத்துவமனை போலீசார் ஜன்னத்து நிஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: