திருச்செந்தூர்: தமிழகத்தில் கடந்த ஏப்.23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. இதில் வரலாறு காணாத வகையில் 85 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியே வந்த தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கையில் வேலுடன் வந்து விஸ்வரூப தரிசனத்தில் வழிபட்டார். இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், அன்பழகன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயம் ஆகியோர் திருச்செந்தூர் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். அப்போது அமைச்சர்களை கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர்கள், சண்முக விலாச மண்டபத்தில் இருந்து கைகளில் வேல் ஏந்தியவாறு உள்ளே சென்று மூலவரான முருகப்பெருமானை சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானை, குரு பகவான், சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் வழிபட்டனர்.
