×

கருட வாகனத்தில் தலசயன பெருமாள் வீதியுலா

மாமல்லபுரம், ஏப்.30: மாமல்லபுரம் தலசயன பெருமாள் 5ம் நாள் பிரமோற்சவ விழாவில் கருட வாகனத்தில் தலசயன பெருமாள் திருவீதியுலா நடைபெற்றது. மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு தலசயன பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து, தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் இருந்து இரவு கருட வாகனத்தில் புறப்பட்டு தென்மாட வீதி, மேற்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கிழக்கு ராஜ வீதி வழியாக வீதியுலா வந்து, தலசயன பெருமாள் மீண்டும் கோயில் வளாகம் வந்தடைந்தார். முன்னதாக, தலசயன பெருமாளை கோவிந்தா… கோவிந்தா… கோஷத்துடன் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இன்று காலை தேரோட்டம்
தலசயன பெருமாள் கோயிலில் கடந்த 24ம் சித்திரை பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து, 27ம் தேதி அம்ச வாகன புறப்பாடு, 28ம் தேதி கருட வாகன புறப்பாடும், நேற்று இரவு யானை வாகன புறப்பாடும் சிறப்பாக நடந்தது. சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Tags : Thalasayana ,Garuda Vahana ,Mamallapuram ,Maharatsava festival of Mamallapuram Thalasayana Perumal ,day Chithirai Brahmotsava festival ,Mamallapuram Thalasayana Perumal temple ,
× RELATED செங்கல்பட்டு, மாமல்லபுரத்துக்கு...