×

பசுமைக்கு திரும்பாத சூட்டிங்மட்டம் புல்வெளிகள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யாத நிலையில் சூட்டிங் மட்டம் சுற்றுலா தலம் பசுமை திரும்பாமல் பழுப்பு நிறத்தில் காட்சி தருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இந்த சமயங்களில் இங்குள்ள புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கும்.

நீர் நிலைகளில் தண்ணீர் அதிகமாக காணப்படும்.அதேசமயம், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் உறைபனி காணப்படும். இது போன்ற சமயங்களில் இங்குள்ள புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகள் அனைத்தும் காய்ந்து விடும். புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில், பெரும்பாலான புல்வெளிகள் பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

ஊட்டி அருகேயுள்ள சூட்டிங்மட்டம் பகுதியில் உள்ள புல்வெளிகளும் மார்ச் மாதம் வரை புல்வெளிகள் காய்ந்து பழுப்பு நிறத்திலேயே காட்சியளிக்கும். அதன்பின், ஏப்ரல் மாதம் ஒரு சில தினங்கள் கோடை மழை பெய்தால், இங்குள்ள புல் மைதானங்கள் மற்றும் மலைகளில் பசுமை திரும்பும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யாமல் வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது.

மேலும், வெயில் அதிகமாக உள்ளதாலும் சூட்டிங்மட்டம் சூழல் சுற்றுலா தலத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் மலைகள் காய்ந்து போய் பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ‘அப்செட்’ ஆகியுள்ளனர். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பசுமையை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது.

Tags : Nilgiris district ,
× RELATED லாலாப்பேட்டை அருகே குடிநீர் வழங்க...