ஊட்டி: உதகை கோடை விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல அம்மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மே 1-ஆம் தேதியிலிருந்து பால், பெட்ரோல், சமையல் எரிவாயு கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் உதகை நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதர கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் கேத்தி, லவ்டேல்,மஞ்சனகொரை,பர்ஹின்ஹில் வழியாக உதகை நகருக்குள் செல்ல வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூரில் இருந்து செல்லும் இலகுரக வாகனங்கள் தலைகுந்தா மட்டம், புதுமந்து வழி மூலம் ஸ்டீஃபன் சர்ச் வழியாக நகருக்குள் செல்லலாம் என தெரிவிக்கப்ட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கூடலூர் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் லவ்டேல் ரயில் நிலையம், மஞ்சனகொரை, காந்தல் முக்கோணம் வழியாக கூடலூருக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் குன்னூரிலிருந்து உதகை செல்லும் வாகனங்கள் ஆவின் வாகன நிறுத்துமிடத்திலும், கோத்தகிரியில் இருந்து செல்லும் வாகனங்கள் அரசு கலைக்கல்லூரி தற்காலிக வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்தப்படும்.
வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபேட்டா உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்கு அரசு சுற்று பேருந்துகள் மூலம் செல்லலாம் என்றும் நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதே போல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும், குன்னூர் பர்லியாறு வழியாக செல்ல அனுமதி கிடையாது. உதகையில் கோடைசீசன் துவங்கி உள்ள நிலையில் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் சுற்றுலா நகரமாக திகழும் உதகையில் அதிக மக்கள் வருகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தவிர உதகை நகரில் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
