செல்லாண்டிபாளையத்தில் தூர்வாராததால் குப்பை கொட்டும் இடமாக மாறி வரும் சிறிய குளம்

கரூர், ஏப். 29: கரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்காலங்களில் வரும் நீரை சேமித்து வைக்கும் வகையில் சிறு குளங்கள் வெட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அது போன்ற ஒரு குளம் விஸ்வநாதபுரி அருகேயுள்ள செல்லாண்டிபாளையம் பகுதியிலும் வெட்டப்பட்டுள்ளது. இந்த சிறு குளம் சரி வர துார்வாரப்படாமல், பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள சிலர் இதனை குப்பை கொட்டும் இடமாக தற்போது மாற்றத்தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு மழைக்காலம் துவங்க உள்ளது. மழை காலம் வந்து விட்டால், இந்த குளத்தில் நீர் நிரம்பி அழகாக காட்சி அளிக்கும். இந்நிலையில் தற்போதே சிலர் அதனை அசுத்தபடுத்தி வர தொடங்கி உள்ளனர். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால், குப்பை குளங்கள் கொட்டிக்கிடக்கும் குளத்தில் மழைநீர் சேர்ந்தாலும் அது பயன்தராத வகையில் துர்நாற்றம் வீசி காணப்படும்.

சுகாதாரமற்ற அந்த நீரை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாக இப்பகுதி மக்களின் நலன் கருதி, தூய்மை பணி மேற்கொண்டு, முறையாக தூர்வாரி புனரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் தொடர்ந்து இந்த குளத்தில் குப்பைகள் கொட்டாமல் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Related Stories: