×

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

சேலம், ஏப்.29: இடைப்பாடி, சங்ககிரி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்தது. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் எண்ணப்படுகிறது. இதற்காக 4 கல்லூரிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் 24 மணிநேரமும் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, இடைப்பாடி மற்றும் சங்ககிரி சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இருப்பறையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதையும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். மேலும் வாக்கு எண்ணிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags : Salem ,Arun Thampuraj ,Idipadi, Sangakiri ,Tamil Nadu Assembly elections ,Salem District 4 ,
× RELATED வாழப்பாடியில் வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்