×

பாரிமுனையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது; உரிமையாளருக்கு வலை

 

தண்டையார்பேட்டை : பாரிமுனையில் குடோனில் பதுக்கிவைத்திருந்த 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய உரிமையாளரை தேடி வருகின்றனர்.சென்னை பாரிமுனை கடற்கரை 4வது லைன் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நேற்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாரிமுனையில் அப்துல் ரகுமான் என்பவருக்கு சொந்தமான குடோனில் நின்றுகொண்டிருந்த ஜீப்பை சோதனையிட்டபோது, அதில் 400 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது, அதன்பேரில் ஜீப்பையும், செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சிவகங்கையை சேர்ந்த ஆனந்தன் அந்தோணி (29), மண்ணடியை சேர்ந்த செங்கிஸ்கான் (28), முகமது அசார் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த தேனாம்பேட்டை வனத்துறை அதிகாரிகளிடம் 3 பேரையும், 400 கிலோ செம்மரக் கட்டைகள் மற்றும் ஜீப்பை ஒப்படைத்தனர்.

தலைமறைவான குடோன் உரிமையாளர் அப்துல் ரகுமானை போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் எங்கிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தார்கள்? கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாரிமுனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Parimunai ,Thandaiyarpet ,
× RELATED தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும்...