×

மத்தியப்பிரதேசத்தில் இந்தாண்டு மட்டும் 25 புலிகள் உயிரிழப்பு!

போபால்: மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில், சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க இளம் புலி ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புலியின் உடல் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருக்கும் கிணறு ஒன்றிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக அந்த நிலத்தின் உரிமையாளரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த புலியின் உடல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின்படி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளம் புலியின் உயிரிழப்போடு சேர்த்து, மத்திய பிரதேசத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி பர்ஹான்பூர் மாவட்டத்தில் ஒரு புலி இறந்ததைத் தொடர்ந்து, இந்த ஒரு மாதத்தில் மட்டும் குட்டிகள் உட்பட 11 புலிகள் உயிரிழந்துள்ளன. நடப்பாண்டின் முதல் உயிரிழப்பு ஜனவரி 7ஆம் தேதி பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் பதிவான நிலையில், அடுத்தடுத்த உயிரிழப்புகள் அம்மாநில வனவிலங்கு பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவிலேயே அதிகப்படியான புலிகளைக் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்கிறது. 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 785 புலிகள் உள்ளன. ஒன்பது புலிகள் காப்பகங்களைக் கொண்டுள்ள இந்த மாநிலத்தில், தொடர்ச்சியாகப் பதிவாகும் இத்தகைய உயிரிழப்புகள், குறிப்பாக மின்சாரம் பாய்ச்சுதல் போன்ற மனிதத் தலையீடுகளால் ஏற்படும் விபத்துகள், இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Sioni, Madhya Pradesh ,
× RELATED பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டமில்லை: ஒன்றிய அரசு திட்டவட்டம்