திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டு காந்தி நகர், ஒற்றை வாடை தெருவில் பொதுமக்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் பூமியில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய குடிநீர் வீணாகியதோடு, சாலையில் குளம் போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து கடந்த 25ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து திருவொற்றியூர் மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் ஊழியருடன் காந்தி நகர் பகுதிக்கு வந்து அங்கு பள்ளம் தோண்டி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சாலையில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
