ஹூக்ளி: பிரதமர் மோடி அரசு என் மீது பல வழக்குகளை தொடுத்துள்ளது. ஆனால் மம்தா பானர்ஜி மீது ஏன் வழக்கு தொடருவதில்லை? என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள செராம்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பேசுகையில், ‘‘மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அமலாக்கத்துறையோ அல்லது மத்தியப் புலனாய்வுத் துறையோ எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இதற்கு காரணம் அவர் பாரதிய ஜனதா கட்சியை நேரடியாக எதிர்த்துப் போராடுவதில்லை என்பதே ஆகும். தற்போது நான் ஜாமீனில் வெளியே இருக்கிறேன். எனது வீடு என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. என் மீது 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன. என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் பீகார் போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கின்றது.
பிரதமர் மோடியால் மம்தா பானர்ஜி மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நான் கேட்க விரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சியை சித்தாந்த ரீதியாக எதிர்த்துப் போராடுவது காங்கிரஸ் கட்சி மட்டுமே. பிரதமர் மோடி என்னையும், கட்சியின் தலைவர் கார்கே மற்றும் பிற தலைவர்களை தொடர்ந்து 24மணி நேரமும் தாக்கி பேசி வருகின்றார். மேற்கு வங்க தேர்தலின்போது மட்டுமே பிரதமர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை தாக்கி பேசுவார். தேர்தல் முடிவடையட்டும். அதன் பிறகு பிரதமர் மோடி மம்தாவிற்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட பேசமாட்டார்’’ என்றார்.
* ‘ஏழைகளுக்கு அல்ல பணக்காரர்களுக்கே மம்தா உதவுகிறார்’
மேற்கு வங்க தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ராகுல்காந்தி, ‘‘பிரதமர் மோடி தன்னை ஒரு தேசபக்தர் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர் நாட்டை விற்றுக்கொண்டு இருக்கிறார். முதல்வர் மம்தா பானர்ஜி ஏழைகளுக்கு உதவாமல் பணக்காரர்களுக்கு உதவுகிறார் என்றால் நாடு முழுவதும் மோடியும் அதையே தான் செய்கிறார். வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் இருவருக்கும் எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்களே தவிர மக்களுக்காக உழைப்பதில்லை” என்றார்.
