தவெக தலைவர் விஜய் ஓய்வுக்காக ஆஸ்திரேலியா செல்ல திட்டம்?

சென்னை: கடந்த சில மாதங்களாக பரபரப்பாக இருந்த தமிழக அரசியல் களம், வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் சற்று அமைதியாக காணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு ஓய்வுக்காகவும் தங்களின் குடும்பங்களுடன் பொழுதுபோக்கவும் சுற்றுலா செல்வது வழக்கம். அந்தவகையில், கடந்த சில மாதங்களாக தீவிரமாக தேர்தல் பணிகளிலும், சில வாரங்களாக தீவிர பரப்புரையிலும் ஈடுபட்டுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் சென்றுள்ளனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல்முறையாக தேர்தலை சந்தித்து, நேரடியாக 233 தொகுதிகளில் போட்டியிட, எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்தார். இந்நிலையில், வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள இந்த சூழலில் விஜய்யும் ஓய்வுக்காக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக எந்த தேதியில் செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை என்றாலும், விஜய் நிச்சயமாக ஆஸ்திரேலியா செல்வார் என்று கூறப்படுகிறது. மற்ற அரசியல் கட்சி தலைவர்களைப்போல் விஜய் தொடர்ச்சியாக பரப்புரையில் ஈடுபடாமல், ஒருநாள் பரப்புரை, ஒருநாள் ஓய்வு எனச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: