புதுச்சேரி: மே1ம் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூருக்கு கூடுதல் விமான சேவை துவங்கப்படுகிறது. புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் வழியாக ராஜமுந்திரிக்கு இண்டிகோ சார்பில் தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு கூடுதலாக ஒரு விமானம் வருகிற மே 1ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தற்போதுள்ள விமான சேவையுடன் கூடுதலாக புதுச்சேரியிலிருந்து பெங்களூருவை இணைக்கும் மற்றொரு விமான சேவையை மே 1ம் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த விமான சேவையின் பயண அட்டவணை விவரம் வருமாறு: பெங்களூருவில் இருந்து தினமும் காலை 10.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 11.15 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.
காலை 11.35 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த புதிய விமானசேவை மூலம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதிலும், புதுச்சேரிக்கும் பெங்களூருக்கும் இடையிலான விமான பயணத்திற்கு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதிலும் ஒரு முக்கிய படியாக அமைகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம் பயணிகள் தங்களது வணிக மற்றும் ஓய்வு பயணங்கள் இரண்டிற்கும் அதிக நெகிழ்வுத்தன்மை, வசதி மற்றும் மேம்பட்ட விருப்ப தேர்வுகளை பெறுவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
