செல்வப்பெருந்தகை வெளியிட்டார் வருமான வரித்துறை சோதனை நடத்திய வீடியோ ஆதாரங்கள்

சென்னை: வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சோதனை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், எங்களை அச்சுறுத்தி முடக்க நினைத்தனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது உண்மையா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் வருமான வரித்துறை தாங்கள் சோதனை நடத்தவில்லை என்று விளக்கம் அளித்து அறிக்கை விட்டுள்ள நிலையில், செல்வப்பெருந்தகை கூறியது உண்மையா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து வீடியோ ஆதாரங்களை வெளியிடுவேன் என்று செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், வருமான வரித்துறையினர் தனது இடங்களில் சோதனை நடத்தியதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய இருந்தார். அங்கு நான் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அன்று மறுநாள் காலை நான் அங்கு செல்ல வேண்டும். எனது தொகுதியில் நான் தங்கி இருக்கிற வீடு மணிமங்கலத்தில் உள்ளது. அங்கு அதிகாரிகள் முற்றுகையிட்டு இருந்தனர். அப்போது, நான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் படப்பை பகுதியில், கட்சியின் நிர்வாகி படப்பை மனோகரன் வீட்டில் இருந்தேன்.

தமிழ் பேச தெரியாத வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து, சிசிடிவி கேமராவை அணைத்துவிட்டு சோதனை நடத்தினர். மேலும், ‘பணம் எங்கே?’ என்று கேட்டு சோதனை செய்தார்கள். அங்கு எதுவும் கிடைக்காததால், கையெழுத்து வாங்கிவிட்டுச் சென்றனர். இதுதொடர்பான காணொலி ஆதாரத்தை இப்போது வெளியிட்டுள்ளேன். அதேபோன்று, நான் கட்சிப் பணிகள் செய்யும் சிறுமாங்காடு பகுதியிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ‘பணம் எங்கே?’ என்று கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

அதையும் ஆதாரத்துடன் விரைவில் வெளியிடுவேன். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை, ரூ.25 லட்சம் தேர்தல் செலவுக்கு வங்கிக் கணக்கு மூலமாக வழங்கியது. நேற்று முன்தினமே என்னால் இதை வெளியிட்டு இருக்க முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற மடைமாற்றம் செய்வதாக சொல்வார்கள். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தவறில்லை. ஆனால், எந்த இடத்தில் சோதனை செய்தோம், எதை கைப்பற்றினோம் என்று ஏன் அவர்கள் வெளியிடவில்லை?.

எங்களை தேர்தலில் அச்சுறுத்தி முடக்க நினைத்தார்கள். ஆனால், அது பலிக்கவில்லை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் வீடுகளில் எத்தனை இடங்களில் சோதனை நடத்தினர் என்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இந்த வெள்ளை அறிக்கை வெளி வந்தால் தான், டெல்லி தலைமை எவ்வளவு காழ்ப்புணர்வுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலை பயன்படுத்தவும், கட்சி தலைவர்களை முடக்கவும் முயற்சித்திருப்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும்.

அதற்கு மாறாக, ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார்கள். சோதனைக்கு வந்த அதிகாரிகள் யார்? அவர்களுடன் காவல்துறையினரும் வந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் ஏன் இந்த அச்சுறுத்தல்?. ஜனநாயக நாட்டில் அதிகாரிகளை வைத்து மிரட்டுவது தீவிரவாதம் தான் என்று தான் மல்லிகார்ஜுனா கார்கே சொன்னார். 5 மாநில தேர்தலுக்கு பிறகு ஒன்றிய பாஜ அரசின் ஆட்சி மாற்றம் வரும். ராகுல்காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே மனது வைத்தால் போதும். சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் தயாராக உள்ளனர்.

இந்த விவகாரத்தில் நான் நாடகமாடுவதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். அவரை எல்லாரும், பெத்த படித்தவர், அறிவு ஜீவி, அரைவேக்காடு அண்ணாமலை என்று தான் சொல்கிறார்கள். நாங்கள் அப்படி சொல்வதில்லை. அதிகாரிகள் சோதனை செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் ஏன் தெரிவிக்கவில்லை?. தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்மதிப்பு உயர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. மீண்டும் முதல்வராக அவரே வருவார்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில துணை தலைவர் கோபண்ணா, முன்னாள் எம்எம்ஏ உ.பலராமன், எஸ்சி துணை தலைவர் ரஞ்சன் குமார், ஓபிசி பிரிவு துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: