சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 4 மாவட்ட திமுக வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 4 மாவட்ட திமுக வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது வெற்றி வாய்ப்புகள் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தமிழகம் முழுவதும் 6 கட்டங்களாக அவர் பிரசாரங்களில் ஈடுபட்டு பேசினார். மேலும் ரோடு ஷோ மற்றும் நடந்து சென்றும் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து 19ம் தேதி இரவு, 20ம் தேதி, 21ம் தேதி என 3 நாட்கள் சென்னையில் உள்ள 16 தொகுதிகளை முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கடைசியாக பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரையாற்றி தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.

அன்றைய தினம் காலையிலேயே சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வருகை தந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார். அப்போது அவர் தமிழ்நாடு வாக்களிக்கும். தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் ஒன்றாக என்று பேட்டியளித்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

அதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories: