புறாவுக்கு தவெக வண்ணம் பூசப்பட்டதற்கு எதிர்ப்பு விஜய்க்கு பீட்டா அமைப்பு எச்சரிக்கை

சென்னை: புறாவுக்கு தவெக வண்ணம் பூசப்பட்டதற்கு பீட்டா இந்தியா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட போது அங்கிருந்த தொண்டர் ஒருவர் கொடுத்த வெள்ளை நிறப் புறாவைப் பறக்கவிட்டார். அந்தப் புறாவின் இறக்கைகளில் தவெக கொடியின் வர்ணம் பூசப்பட்டிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா இந்தியா, இது தொடர்பாக விஜய்க்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளது.  அந்தக் கடிதத்தில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் விலங்குகளையோ அல்லது பறவைகளையோ, பயன்படுத்துவது அவற்றுக்குத் தேவையற்ற துன்பத்தைத் தரும். விலங்குகள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவை அல்ல, புறாக்கள் உணர்வுபூர்வமானவை, அவற்றுக்கு வண்ணம் பூசுவது, கூட்டத்தில் பறக்க விடுவது கூடாது.

எனவே, இனிவரும் காலங்களில் பிரசாரங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய உங்கள் கட்சி கொள்கை அளவில் முடிவெடுக்க வேண்டும் என பீட்டா கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே கட்சிப் பெயர் மற்றும் கொடி அறிமுகத்தின் போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்த தவெகவிற்கு, இப்போது பீட்டா அமைப்பின் இந்தக் கடிதம் புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: