வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற வாகனத்தை மறித்த அதிமுகவினர்

சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி விடிய விடிய தீவிரமாக நடந்தது. இந்நிலையில், பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி வழியாக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது குமணன்சாவடி பகுதிக்கு வந்த பூந்தமல்லி அதிமுகவினர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தை வழிமறித்தனர். மேலும் வாகனத்திற்கு சீல் வைக்காமல் எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறி வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த வாகனத்தை சோதனை செய்த போது, வாகனத்திற்குள் இருக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், வாகனத்திற்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் போலீசார் எடுத்து கூறியும் அதிமுகவினர் ஏற்க மறுத்தனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அதிமுகவினர் கலைந்து சென்றனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆலந்தூர் தொகுதியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதை பூந்தமல்லி அதிமுகவினர் மடக்கி வைத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: