திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தெரு குழாய் மற்றும் வீட்டு இணைப்பு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீர் புழல் ஏரியிலிருந்து மணலி குடிநீரேற்று நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், 7வது வார்டு காந்தி நகர், ஒற்றை வாடை தெருவில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதுகுறித்து குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாததால் பொது மக்களுக்கு பயன்பட வேண்டிய குடிநீர் வீணாகி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் இந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் சீராகவும் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களாகவே இங்கு குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்து அதிகாரிகள் வந்து சரி செய்தாலும் தண்ணீர் வெளியேறுவது நிற்கவில்லை. எனவே குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் பழுது ஏற்படுவதை தடுக்கும் வகையில் முழுமையான பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.
