போராட்டத்தால் டிராபிக் ஜாம் மராட்டிய அமைச்சரை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு எதிராக போலீசில் புகார்

மும்பை: மும்பையில் பாஜவின் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்காக, அமைச்சர் கிரிஷ் மகாஜனை திட்டிய ஒரு பெண்ணுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைந்து அமல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வி அடைந்ததை கண்டித்து, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை பாஜ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஒர்லியில் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பெண் ஒருவர், போராட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர் கிரிஷ் மகாஜனை கடுமையாக சாடினார்.

‘உங்களால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்கிருந்து வெளியேறுங்கள். திறந்தவெளி மைதானத்தில் போராட்டம் நடத்த முடியாதா?’ என்று தட்டிக் கேட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அமைச்சரை திட்டிய பெண்ணுக்கு எதிராக ஜென் சடவர்தே என்பவர் ஒர்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், அப்பெண் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதோடு போராட்டத்திற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக, அப்பெண்ணின் கோபம் ஓரளவுக்கு நியாயமானது தான் என்று அமைச்சர் மகாஜன் கூறியிருந்தார். இருப்பினும், அவர் பேசியது தவறாக இருந்ததாக கூறிய அமைச்சர், அப்பெண் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார். பாஜவைச் சேர்ந்த மும்பை மாநகராட்சி மேயர் ரித்து தவாடேவும் போராட்டத்தின் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக வருத்தம் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: