சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆம்ஆத்மியை உடைத்தது பா.ஜ: ராகவ் சதா, ஹர்பஜன் உள்பட 7 எம்பிக்கள் விலகல்; 3 பேர் உடனடியாக பா.ஜவில் இணைந்தனர்

புதுடெல்லி: சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சியை பா.ஜ உடைத்து விட்டது. அந்த கட்சியில் இருந்து ராகவ் சதா, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட 7 எம்பிக்கள் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் பா.ஜவில் இணைந்தனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக பா.ஜ உடைத்தது. சிவசேனா கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்களை வெளிவரச்செய்து அவரை முதல்வர் ஆக்கியது. இதனால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை இழந்தார்.

அதே போல் சரத்பவார் தலைமையில் செயல்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியை சமீபத்தில் விமான விபத்தில் மறைந்த அவரது உறவினர் அஜித்பவாரை வைத்து உடைத்து அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது. அந்த வழியில் தற்போது டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியையும் பா.ஜ உடைத்துள்ளது. அந்த கட்சியின் மாநிலங்களவை எம்பி சுவாதி மாலிவால் பா.ஜவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவையும் பா.ஜ வளைத்துப்போட்டு அவர் மூலம் ஆம்ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்துள்ளது.

2012ல் ஆம்ஆத்மி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதில் தன்னை இணைத்துக்கொண்டவர் ராகவ் சதா. ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய இவர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீப காலமாக கெஜ்ரிவாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து ராகவ் சதா, அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராகவ் சதாவிடம் இருந்து கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

மேலும் சமீபத்தில்தான் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அசோக் மிட்டல் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ராகவ் சதா ஆம்ஆத்மியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து 7 ஆம்ஆத்மி எம்பிக்களும் விலகுவதாகவும், அவர்கள் பா.ஜவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று ராகவ் சதா, சந்தீப் பதக், புதியதாக ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட அசோக் மிட்டல் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராகவ் சதா கூறுகையில், ‘ ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர்களில் நானும் ஒருவன். எனது வாழ்வின் 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சிக்காக நான் அர்ப்பணித்தேன். நாங்கள் பஞ்சாப், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கட்சியை வளர்த்தெடுத்தோம். ஆனால், இப்போது கட்சி நேர்மையான அரசியலில் இருந்து விலகிவிட்டது. கட்சி தற்போது ஊழல் மலிந்ததாகவும் சமரசங்களுக்கு உட்பட்டதாகவும் மாறிவிட்டது. தற்போது இருப்பது பழைய ஆம் ஆத்மி கட்சி அல்ல. ஆம் ஆத்மியின் தவறான நடவடிக்கைளில் நான் ஈடுபட விரும்பவில்லை. எனவே, கட்சியில் இருந்து விலகி மக்களுடன் நெருக்கமாகச் செல்ல இருக்கிறேன்.

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரில் நான், ஹர்பஜன் உள்பட 7 பேர் பாஜவில் இணைய இருக்கிறோம். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவருக்கு நாங்கள் கடிதம் எழுதி அனுப்பிவிட்டோம்.கடந்த சில ஆண்டுகளாக, தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர் நான்தான் என்று நான் தீவிரமாக உணரத் தொடங்கினேன். இன்று, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி, பொதுமக்களுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்ற எனது முடிவை நான் அறிவிக்கிறேன்’ என்றார். ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜவில் இணைவதாக அறிவித்த ராகவ் சதா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் உடனடியாக டெல்லி பாஜ தலைமை அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். அங்கு ஒருவருக்கு ஒருவர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

* பா.ஜவில் இணைந்த 3 எம்பிக்களை பதவி நீக்க ஆம்ஆத்மி கோரிக்கை
பா.ஜவில் இணைந்த மாநிலங்களவை எம்பிக்கள் ராகவ் சதா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரை தகுதிநீக்கம் செய்யக் கோரப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

* மாநிலங்களவையில் பலத்தை இழக்கும் ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 7 பேர் பஞ்சாபிலிருந்தும், 3 பேர் டெல்லியிலிருந்தும் தேர்வாகியுள்ளனர். இந்தச் சூழலில் தான் மாநிலங்களவையின் அக்கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இது அக்கட்சிக்கு மாநிலங்களவையில் பலத்தையும் இழக்கச் செய்துள்ளது.

* பா.ஜ வாஷிங் மெஷின்: பஞ்சாப் முதல்வர் கருத்து
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில்,’ சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமும் பயன்படுத்தப்பட்ட அதே ‘வாஷிங் மெஷின்’ பஞ்சாபில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பாஜவுக்கு எந்தவொரு அடித்தளமும் இல்லை. பாஜவில் இணையும் இந்த 7 எம்.பி.க்களும் பஞ்சாப்பை பிரதிபலிக்கமாட்டார்கள். துரோகிகளான அவர்களுக்கு பாஜவிலும் எதுவும் கிடைக்காது’ என்றார்.

* பஞ்சாப் மக்கள் மீது ஆபரேஷன் தாமரை சஞ்சய் சிங் எம்பி ஆவேசம்
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில்,’ பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முன்னெடுத்த நல்லாளுமைப் பணிகளுக்குத் தடையை ஏற்படுத்தும் வேலையை பாஜ செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜவில் இணையவுள்ளனர். பஞ்சாப் மக்கள் இந்த 7 பெயர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். பஞ்சாப் மக்கள் அவர்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பஞ்சாப் அரசாங்கத்தின் மீது ‘ஆபரேஷன் தாமரை’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ‘ஆபரேஷன் தாமரை’ நிறைவேற்ற அமலாக்கத்துறையும், சிபிஐயும் பயன்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் மக்கள் இந்த ‘துரோகிகளை’ ஒருபோதும் மறக்க மாட்டார்கள்’ எனத் தெரிவித்தார்.

* பஞ்சாப் மக்களுக்கு பா.ஜ மீண்டும் அநீதி கெஜ்ரிவால் ஆவேசம்
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் கூறுகையில்,’ பஞ்சாப் மக்களுக்கு பாஜ மீண்டும் அநீதியை இழைத்துவிட்டது’ என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

7 எம்பிக்கள் யார்?
1. ராகவ் சதா
2. ஹர்பஜன் சிங்
3. சுவாதி மாலிவால்
4. ராஜேந்திர குப்தா
5. விக்ரம் சஹ்னி
6. அசோக் மிட்டல்
7. சந்தீப் பதக்

* பா.ஜவின் அடுத்த இலக்கு பஞ்சாப்
டெல்லியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்த மாநிலம் பஞ்சாப். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் 2027ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க பாஜ தீவிரமாக செயலாற்றிவருகிறது. இந்தச் சூழலில், ஆம் ஆத்மியில் இருந்து ஏழு எம்.பி.க்கள் மொத்தமாக விலகி பாஜவில் இணைந்திருப்பதையும், வர இருக்கும் பஞ்சாப் மாநிலத் தேர்தலையும் தொடர்புப்படுத்தி இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்.

Related Stories: