தேர்தல் நடத்தை விதி மீறப்பட்டதாக புகார்; மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

 

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தூர்தர்ஷன் உரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி தூர்தர்ஷன் மற்றும் சன்சத் டிவி ஆகிய ஒன்றிய அரசு தொலைக்காட்சிகளில் பிரதமர் மோடி ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையில், 131 சட்டத்திருத்த மகளிர் மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று அவர் விமர்சித்திருந்தார். இது தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை திசைதிருப்பும் செயல் என்றும், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு ஊடகங்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும் என்றும் கூறி, காங்கிரஸ் நிர்வாகி டி.என்.பிரதாபன் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123(7) படி, தேர்தல் ஆதாயத்திற்காக ஒன்றிய அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவது ஊழல் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ‘அரசு தொலைக்காட்சிகளில் அரசியல் உரையை ஒளிபரப்பியது சட்டவிரோதமானது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். உச்சநீதிமன்ற இணையதளத்தில் இந்த மனு தற்போது சில குறைபாடுகளுடன் நிலுவையில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

 

Related Stories: