புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியை விமர்சித்தபோது பிரதமர் மோடியை ‘தீவிரவாதி’ என்று குறிப்பிட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரின் திராவிடக் கொள்கைகளை பின்பற்றும் அதிமுகவினர், சமத்துவத்தை நம்பாத மோடியுடன் எப்படி இணைய முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்த கார்கே, ‘பிரதமர் மோடி மக்களையும் அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தி வருகிறார்.
நான் அவரை நேரடி தீவிரவாதி என்று சொல்லவில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு அவர் மிரட்டுவதையே அந்த அர்த்தத்தில் கூறினேன்’ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், தலைமை தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் நேற்று சுருக்கமான பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கள் உள்நோக்கத்துடன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பொதுவெளியில் விளக்கம் அளித்துவிட்டார். தேர்தல் ஆணையம் ஒரே எண்ணில் இரண்டு வெவ்வேறு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.
அதில் ரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் டெரிக் ஓ பிரையன் பெயரைக் குறிப்பிட்டு ஒரு நோட்டீசும், அவர் பெயரை நீக்கி மற்றொரு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 131ம் அரசியலமைப்பு சட்ட திருத்தம் தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையும், தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களுக்கு மாதம் 3000 ரூபாயும், கர்ப்பிணிகளுக்கு 21000 ரூபாயும், வேலையில்லாத இளைஞர்களுக்கு 3000 ரூபாயும் வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியும் தேர்தல் விதிமீறல்களாகும். இதுதொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும். பல்வேறு பிரசாரங்களில் கார்கே பிஸியாக இருப்பதால் கூடுதல் அவகாசம் தேவை’ என்று வலியுறுத்தியுள்ளார்.
