சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பொதுமக்கள் சென்னையில் 83.73 சதவீத வாக்குப்பதிவு

 

* வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
* சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு

சென்னை: சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மாலை 6 மணி நிலவரப்படி 83.73 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து அறை மூடப்பட்டது. பாதுகாக்கப்பட்ட அறைக்கு சிசிடிவி பதிவுகளுடன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

வாக்களிப்பதற்காக 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. சென்னையில் 28,93,505 வாக்காளர்கள் உள்ள நிலையில், 19,604 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, மின்வசதி, மருத்துவ வசதி, கழிவறை, கைப்பிடியுடன் கூடிய சாய்தளம், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதி, நிழற்பந்தல், வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்குப்பதிவு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், 83.73 சதவீத வாக்குகள் பதிவானத. அதைதொடர்ந்து சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன், பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இந்த பணி நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 ெதாகுதிகளில் பதிவானவாக்குபதிவு இயந்திரங்கள் மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும், கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை லயோலா கல்லூரியிலும், தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் கிண்டியில் உள்ள அண்ணாப்பல்கலைக்கழக மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

3 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் வைக்கப்பட்ட அறையை சுற்றிலும் 24 மணி நேரமும் துப்பாக்கிகளுடன் துணை ராணுவ வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் தனித்தனியாக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சுழற்றி முறையில் பாதுகாப்பு பணிகள் வழங்கப்படுகிறது. இந்த 3 மையங்களிலும், வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை ஓட்டு எண்ணும் நாளான மே 4ம் தேதி வரை இந்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 16 தொகுதிகளில் வாக்கு சதவீதம்
சென்னை, ஏப். 24: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், 4 தொகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன்படி 16 தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: