சென்னை: ஒரே குடும்பத்தை சேர்ந்த கைக்குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை 18 பேர் ஒரே நேரத்தில் குடும்பமாய் வந்து தங்களின் வாக்கினை செலுத்தி விட்டு சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆக்கியுள்ளது. தமிழக முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிகளில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் ஒரே நேரத்தில் வந்து வாக்களித்தனர். சிறுவர் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாக்களிக்க வந்தது அங்கு இருந்த பிற வாக்காளர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்தக் குடும்பத்தில் 4 மாதக் கைக்குழந்தை முதல் 80 வயதான முதியவர் வரை அனைவரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் முறையாக தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். சிறியவர்கள் குடும்பத்தினருடன் வருவதன் மூலம், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.
இது குறித்து பேசிய குடும்பத்தின் மூத்த உறுப்பினரான மனோன்மணி கூறியதாவது : ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் அனைவரும் குடும்பமாக சேர்ந்து வந்து வாக்களிப்பது வழக்கம். இது எங்களுக்கு ஒரு கடமை மட்டுமல்ல, ஒரு விழாவைப் போன்ற உணர்வையும் தருகிறது. இவ்வாறு ஒன்றாக வந்து வாக்களிப்பதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு ஜனநாயகத்தின் மதிப்பையும், வாக்களிப்பதின் அவசியத்தையும் உணர்த்துகிறோம். மேலும், இவ்வாறான குடும்ப ஒற்றுமையும், பொது பொறுப்புணர்வும் சமூகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
