* உங்கள் வீட்டு ஃபிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீசருக்குள்ளும், ஃப்ரிட்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிட்ஜ் திறந்தால் ஒரே கமகமதான்.
* ஊதுபத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டு வைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
* துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
* நைலான் கயிறை வாங்கியவுடன் சோப்பு நீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
* தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மீது கோலப் பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.
* ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
* நிறம் மங்கிய வெள்ளைத் துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊறவைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
* மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
* பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஐந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
* நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
* தேங்காயை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
* மெழுகுவர்த்திகளை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது. அதிக நேரம் எரியும்.
கவிதா பாலாஜிகணேஷ்.
