இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டு உரிமையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதோடு, அந்த வீட்டில் இருந்த தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட நபர், சம்பவம் குறித்து முறையாகப் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் குமார் பிரதீக் தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் சமீபத்தில் ஒருநாள் இரவு நிகழ்ந்ததாகவும் அப்போது ஐந்து முதல் ஆறு காவல்துறையினர் புகார்தாரரின் வீட்டிற்கு சென்றனர். பின் அந்த காவல்துறையினர் புகார்தாரர் வீட்டின் கதவை உடைத்து கொண்டு வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகார் விஜயநகர் உதவி ஆணையரால் (ACP) விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குமார் பிரதீக் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது சுமார் 20 சவரன் தங்க நகைகள் தங்கள் வீட்டில் இருந்து காவல்துறையினரால் திருடப்பட்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் முறைகேடான நடத்தை, சட்டவிரோதக் காவலில் வைத்தல் மற்றும் இணையவழி மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர் புகார் தெரிவித்து உள்ளார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அதிகாரிகள் அணைத்து, மாஸ்டர் சாவியைப் பயன்படுத்தி கதவுகளைத் திறந்தனர். இந்த முழு நடவடிக்கையையும் சட்டவிரோதமானது என்று கூறியுள்ள அந்த பாதிக்கப்பட்ட நபர், காவல்துறை தனது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே அதிகாரிகளின் தகவலின்படி, ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ராகேஷ் குப்தா என்பவருடன் ஏற்பட்ட நிதி தகராறு ஒன்றில் தொடர்புடைய கௌரவ் ஜெயின் என்பவருக்கு எதிரான காசோலை மோசடி வழக்கு தொடர்பாக, ஒரு பிடியாணையை நிறைவேற்றுவதற்காகவே அந்த காவல்துறையினர் அங்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே லசூடியா காவல் ஆய்வாளர் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது; இதில் அவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
