அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும்

*கலெக்டர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் மாவட்ட கலெக்டர் சுமித்குமார் தலைமையில் நேற்று சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்களுடன் மற்றும் காணொலி காட்சி வாயிலாக மாவட்டம் முழுவதும் உள்ள மாவட்டத்தின் உயர்துறை அதிகாரிகள், மண்டல வளர்ச்சி அலுவலர்கள் மண்டல வருவாய் அலுவலர்கள் மற்றும் மத்திய திட்ட வளர்ச்சி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பி.ஜி.ஆர்.எஸ், பி.பி.பி, ஆர்.ஓ.ஆர், எப்-லைன் போன்ற பல்வேறு வருவாய் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இணை ஆட்சியர் ஏ.ராஜேந்திரன், மண்டல வருவாய் அலுவலர் கே.மோகன்குமார், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அப்போது கலெக்டர் சுமித்குமார் பேசியதாவது:

பொதுமக்களுக்கு தரமான சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் 100 சதவிகிதம் செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.சி. பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். கழிப்பறைகள் மற்றும் சுகாதார வசதிகள் சுத்தமாக இருக்க வேண்டும் பல்வேறு பிரச்னைகளுக்காக அரசு அலுவலகத்திற்கு வரும் சாமானிய மக்களின் பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களை பணிவுடன் மதிக்கவும், அவர்களின் பிரச்னைகளை பொறுமையாக கேட்டு தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும்போது அவர்களின் பிரச்னைகளை பொறுமையாக கேட்டு அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை விரைவாக முடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வருவாய் பிரச்னைகள் குறித்து ஒவ்வொரு மண்டல வருவாய் அதிகாரி கிராம வருவாய் அதிகாரி மற்றும் மண்டல நில அளவையாளருடனும் ஒரு மணி நேரத்திற்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் கிராமங்களில் உள்ள கிராம வருவாய் அலுவலர் குறைகளை தீர்ப்பது முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

கணக்கெடுப்பு நடத்தப்படும்போது, பயனாளிகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆவணம் ஒப்படைக்கப்பட வேண்டும். யாதமாரி மண்டலம், சாந்திபுரம் மண்டலம், கங்காதர நெல்லூர் மற்றும் குடிபள்ளி மண்டலங்களில் ஏராளமான வருவாய் பிரச்னைகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. ஆகவே வருவாய் அலுவலர்கள் அவற்றை தீர்க்க பணியாற்ற வேண்டும்.

அரசு சேவைகள் மீதான மக்களின் திருப்தி நிலை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். முதலமைச்சர் அடுத்த மாதம் நமது மாவட்டத்திற்கு வருகை தருவார். ஆகவே மாவட்டத்தின் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் மண்டல வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வருவாய் அலுவலர்கள, நகர வளர்ச்சி அலுவலர்கள் கல அளவில் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: