இடமலைக்குடி ரேஷன் முறைகேடு சம்பவம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில உணவு ஆணையம் பரிந்துரை

மூணாறு : இடமலைக்குடி ரேஷன் முறைகேடு சம்பவத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில உணவு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் இடமலைகுடி ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக நிலவி வந்த ரேஷன் அரிசி தட்டுப்பாடு குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநில உணவு ஆணையத் தலைவர் டாக்டர் ஜினு ஜகாரியா உம்மன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

உம்மன் சொசைட்டி ரேஷன் கடை மற்றும் அதன் ஆவணங்களை ஆய்வு செய்ததில், முதற்கட்டமாக முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. வழங்கல் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ​சுமார் 65 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் மாயமாகியுள்ளன. ​

மேலும், ரேஷன் கடையில் பராமரிக்கப்பட வேண்டிய அடிப்படைப் பதிவேடுகளும் மாயமாகியுள்ளன. ​கடையானது எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் இயங்கி வந்ததாக ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.​

இந்நிலையில், பதவி நீக்கம் மற்றும் பரிந்துரை ​இந்த முறைகேடு தொடர்பாக கிரிஜன் சர்வீஸ் கூட்டுறவு சங்கத்தின் உரிமத்தை இடுக்கி மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஆஷா ஏற்கனவே ரத்து செய்துள்ளார். தற்போது தற்காலிகமாக ராஜமலை ரேஷன் கடை உரிமையாளரிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.​

மேலும், இந்த ஊழலில் தொடர்புடையதாகக் கருதப்படும் ​அகில் ஜோஸ் – கிரிஜன் சர்வீஸ் கூட்டுறவு சங்க செயலாளர், ​சஞ்சய்நாத் – தேவிகுளம் வழங்கல் துறை அதிகாரி.,ஜெயகுமார் – ரேஷன் ஆய்வாளர் மற்றும் ஜெமி ஜோஸ் – ரேஷன் ஆய்வாளர் ஆகிய நால்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 ஆகியவற்றின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் விரிவான மேல் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சியில், ரேஷன் அரிசியில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: