தவெக வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

 

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் இந்திரா நகரை சேர்ந்தவர் உதயகுமார்(33). தவெக கிழக்கு மாவட்ட செயலாளர். வந்தவாசி (தனி) தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்றுமுன்தினம் வேட்பாளர் உதயகுமார் பிரசாரம் முடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வந்தார். அவரது மனைவி சவுந்தர்யா, மகன் கீர்த்தீஸ்வரன் ஆகியோருடன் வீட்டின் உள் அறையில் படுத்து தூங்கினார்.

உதயகுமாரின் தாய் மீனா, தேர்தல் பிரசாரத்திற்கு உதவியாக வந்திருந்த அவரது சகோதரிகள் பாரதி, சவுந்தர்யா, அக்கா மகன் கிஷோர் ஆகியோர் ஹாலில் படுத்திருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் வெளியே பெட்ரோல் கருகிய வாசனை வந்தது. இதனால் மீனா வெளியே வந்து பார்த்தார். அப்போது பெட்ரோல் குண்டு வாயிற்படி மீது வீசியதால் தீப்பற்றி அதில் மாட்டியிருந்த வெட்டிவேர் மாலை எரிந்துகொண்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர், மகள்கள், மகனை எழுப்பினார். அவர்கள் வந்து தீயை அணைத்தனர். அப்போது பாரதியின் கையில் தீப்பொறி பட்டு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உதயகுமார் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: