ராஜஷாகி: இலங்கை மகளிருக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நேற்று, வங்கதேச மகளிர் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ராஜஷாகியில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை மகளிர் முதலில் பேட்டிங் செய்தனர். அந்த அணியின் துவக்க வீராங்கனைகளாக, கேப்டன் ஹாசினி பெரேரா, இமேஷா துலானி களமிறங்கினர்.
ரிது மோனி வீசிய 14வது ஓவரில், அணியின் ஸ்கோர் 68 ஆக இருந்தபோது, ஹாசினி (27 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்சிதா சமரவிக்ரமா 2 ரன்னில் வீழ்ந்தார். இமேஷா துலானி சிறப்பாக ஆடி 77 பந்துகளில் 52 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின் வந்தோரில் ஹன்சிமா கருணாரத்னே 71 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 50 ஓவரில் இலங்கை மகளிர், 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்தனர்.
அதையடுத்து, 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேச மகளிர் களமிறங்கினர். அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் சர்மின் சுல்தானா ரன் எடுக்காமலும், ஜுவய்ரியா பெர்தூஸ் 5 ரன்னிலும் அவுட்டாகி மோசமான துவக்கம் தந்தனர். இருப்பினும் அடுத்து வந்த ஷர்மின் அக்தர் அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டு, 127 பந்துகளில் 86 ரன் விளாசி அவுட்டானார். அடுத்து வந்தவர்களில் ஷோபனா மோஸ்தாரி 41 ரன் எடுத்து காயமடைந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய மற்றொரு வீராங்கனை சொர்ணா அக்தர் 35 ரன் எடுத்தார். 48.3 ஓவரில் வங்கதேச மகளிர் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.
