டிரம்பிற்கு நோபல் பரிசை கொடுத்தது ஏன்? காரணம் கூறிய மரியா கொரினா மச்சாடோ

வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பின்போது தனக்கு கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்கா அதிபர் டொனால்ட் ஜான் டிரம்ப்பிற்கு பரிசாக வழங்கினார். இச்செயல் சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் மரியா கொரினா மச்சாடோ தற்போது இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ஜான் டிரம்ப் சந்தித்த மரியா கொரினா மச்சாடோ அந்த சந்திப்பின் போது தனது நோபல் பரிசை அவரிடம் ஒப்படைத்தார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காக கைது செய்ய அமெரிக்கா சிறப்பு படைகளுக்கு டிரம்ப் உத்தரவிட்ட நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்த அந்த நடவடிக்கை வெனிசுலா மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக மரியா கொரினா மச்சாடோ முன்வைத்தார். மட்ரிட் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை குறித்து விளக்கம் அளித்த மரியா கொரினா மச்சாடோ வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக தனது நாட்டு மக்களின் நலனை முன்னிருத்தி துணிச்சலாக செயல்பட்ட உலக தலைவர் டிரம்ப் மட்டுமே என்று புகழாரம் சூட்டினார்.

அவருக்கு தனது நன்றியை வெளிப்படுத்தும் குறியீடாகவே விருதை வழங்கியதாகவும் இதில் எந்தவித வருத்தமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். டிரம்ப் தரப்பில் இது பரஸ்பர மரியாதையின் அடையாளம் என்று பாராட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நோபல் கமிட்டியின் (Nobel Committee) விதிகளின் படி கேள்விகளுக்கு உள்ளாகி உள்ளது. அமைதிக்கான நோபல் விருது தனிப்பட்ட கௌரவம் சார்ந்தது என்றும் அதை மற்றவர்களுக்கு பரிசாக மாற்றவோ அல்லது பகிரவோ அனுமதி இல்லை என்றும் நோர்வே நோபல் கமிட்டி (Norwegian Nobel Committee) அந்த சமயத்திலேயே தெளிவுபடுத்தி இருந்தது.

அரசியல் ரீதியாக பார்த்தால் டிரம்ப், மரியா கொரினா மச்சாடோவை நேர்மறையாக பேசினாலும் வெனிசுலாவின் இடைக்கால தலைவராக மதுரோவின் முன்னாள் துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) ஆதரிப்பது இருவருக்கும் இடையிலான உறவில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது வாஷிங்டன் அரசின் ஒருங்கிணைப்புடன் வெனிசுலா திரும்ப திட்டமிட்டுள்ள மரியா கொரினா மச்சாடோ அங்கு ஜனநாயக மாற்றத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு அவசியம் என்பதில் உறுதியாக உள்ளார்.

முன்னதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) சந்திக்க மரியா கொரினா மச்சாடோ மறுத்த நிகழ்வு அவரது அரசியல் ராஜதந்திரத்தில் முக்கிய மாற்றமாக பார்க்கப்பட்டது. பெட்ரோ சான்செஸ் ஏற்பாடு செய்த முற்போக்கு தலைவரின் மாநாடு தனது அரசியலின் நிலைப்பாட்டிற்கு ஏற்றதல்ல எனக்கூறி அவர் அந்த சந்திப்பை தவிர்த்தார்.

2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மச்சாடோவின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து இன்னும் தெளிவான அறிவிப்புகள் வெளியாகவில்லை. கடந்த 27 ஆண்டுகள் நிலவி வரும் அரசியல் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தனது ஆதரவாளர்களை வெனிசுலா திரும்புமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்வுகள் வெனிசுலாவின் அரசியல் எதிர்காலத்தையும் அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையின் செல்வாக்கையும் பிரதிபலிப்பதால் அரசியல் நோக்கர்கள் தொடர்ந்து உற்றுநோக்கி வருகின்றனர்.

Related Stories: