ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரியில் பாஜ வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ மற்றும் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தை சேர்க்க பாஜ நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, பவானி உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வந்திருந்தனர்.
காலை 9.30 மணிக்கு அமித்ஷா வந்துவிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் முன்கூட்டியே பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால் 10.45 மணிக்கு தான் அமித்ஷா வந்தார். இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் வெயிலில் காத்திருந்தனர். குறிப்பாக பெண்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர்.
அவர்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல முயன்றனர். அப்போது அவர்களை பாஜவினர் தடுத்து நிறுத்தி சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று சமாதானப்படுத்தினர். பின்னர் பாஜ வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமித்ஷா ரோடு ஷோ மற்றும் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசுகையில், “மோடி தலைமையில் தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமையும். தமிழ்நாட்டின் சிறப்புகள், பெருமைகள் மீட்டெடுக்கப்படும்” என்றார். அமித்ஷாவின் இப்பேச்சை கேட்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். அமித்ஷாவின் ரோடு ஷோவின் போது, அப்பகுதியில் இருந்த வீடுகளின் மொட்டை மாடியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது, குடியிருப்புவாசி ஒருவர் குடையை துவைத்து கம்பியில் காயப்போட்டிருந்தார். அதனைக்கண்ட போலீசார் உடனடியாக கருப்பு கொடி காட்டுவதாக கருதி ஓடிச்சென்று அந்த கருப்பு குடையை அகற்றினர். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருப்பு கொடி போராட்டம், மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
இதனால், தமிழ்நாட்டில் பிரசாரத்தில் ஈடுபடும் நமக்கும் கருப்புக்கொடி காட்டிடுவாங்களோ என அமித்ஷா பயத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோடு ஷோ முடிந்தவுடன் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் மாலை மற்றும் சால்வையுடன் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் அவர்களை அமித்ஷா கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்றார். அமித்ஷா அருகில் சென்ற அதிமுக நிர்வாகிகளை, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் நெருங்கவிடவில்லை. இதனால் அதிருப்தியடைந்தனர்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ, சிவகிரி கடைவீதி அரசு மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் இருந்து தீரன் சின்னமலை ரவுண்டானா வரை நடந்தது. இப்பகுதியில் அனைத்து கடைகளையும் பாஜ நிர்வாகிகள் அடைக்க வற்புறுத்தியும், போலீசார் அழுத்தம் கொடுத்தும் கடையை அடைத்தனர். அதிகாலை முதல் மதியம் வரை கடைகள் அடைக்கப்பட்டதால் தினசரி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
* வேட்பாளர் பெயரை மாற்றிய அமித்ஷா
மொடக்குறிச்சி பாஜ வேட்பாளரான சிட்டிங் எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகள் கிருத்திகாவை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது கிருத்திகா என்பதற்கு பதிலாக கார்த்திகா என்றார். இதையடுத்து அருகில் இருந்த வேட்பாளர் கிருத்திகா ‘‘ஜி கார்த்திகா இல்லை கிருத்திகா’’ என்று திருத்தி கூறினார்.
