- அவினாஷ் குமார்
- தமிழ்நாடு புலனாய்வு ஐ.ஜி.
- தேர்தல் ஆணையம்
- சென்னை
- இந்திய தேர்தல் ஆணையம்
- செந்தில்வேலன்
- தமிழ்நாடு சட்டமன்றம்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் திடீரென தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அவினாஷ்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் ேததி ஒரே கட்டமாக நடக்கிறது.
இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர், 8 மாவட்ட எஸ்பிக்கள், 2 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில் மாநில சைபர் க்ரைம் டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பு இல்லாத லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதமும் எழுதப்பட்டது.
அதேநேரம் தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டு வடமாநில அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்து வருவதாக குற்றச்சாட்டு இருந்தது. அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்த சந்தீப் மிட்டல் கடந்த வாரம் அதிரடியாக மாற்றப்பட்டு, அவருக்கு பதில் லஞ்ச ஒழிப்பு துறையில் ஐஜியாக இருந்த துரைகுமார் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க 2 நாட்கள் உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் திடீரென தமிழக காவல்துறை உளவுத்துறை ஐஜியாக பணியாற்றி வந்த செந்தில் வேலனை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதில் தமிழ்நாடு காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் ஐஜியாக பணியாற்றி வரும் அவினாஷ்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த பணியில் அவினாஷ்குமார் உடனே பதவியேற்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அந்த உத்தரவை தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் மணிவாசன் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மேற்கு வங்கம் போல் தமிழ்நாட்டிலும் ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக உயர் மட்டத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு, வடமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
