திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பெண் தொழிலாளர்களிடம் முதல்வர் கலந்துரையாடல்

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று திருப்பூரில் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு திருப்பூருக்கு வந்தார். குமார்நகரில் உள்ள தொழிலதிபர் வீட்டில் தங்கியிருந்த முதல்வர் நேற்று காலை முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் வெற்றி நிலவரம் மற்றும் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள பிரதான பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அனைவரிடமும் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள எஸ்ஏபி தியேட்டர் அருகே தனியார் பனியன் நிறுவனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

அப்போது பனியன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் முதல்வர் கனிவுடன் கலந்துரையாடினார். பணியில் இருந்த பெண்களிடம், ‘‘மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை சரியாக வருகிறதா? விடியல் பயணம் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா?’’ என்று கேட்டறிந்தார். அதற்கு அவர்கள் அத்திட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்.

அப்போது மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும். அதன் மூலம் உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். உங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் 2.0 ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றப்படும். பெண்களுக்கு என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதனால் ஒவ்வொரு குடும்ப தலைவிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்’’ என்றார்.

* எங்களை தேடி வந்து இருக்காரு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் குமார்நகரை சேர்ந்த மகாலட்சுமி கூறும்போது, ‘‘நாங்கள் வேலை செய்து வருகிற நிறுவனத்திற்கு முதல்வர் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நாட்களாக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாளில் பார்த்த முதல்வரை முதல் முறையாக நேரில் பார்த்தது உற்சாகமாக இருந்தது. எங்களிடம் அரசின் திட்டங்களில் எந்த திட்டம் நன்றாக உள்ளது? என கேட்டார். நாங்கள் அனைத்து திட்டமும் நன்றாக உள்ளது என கூறினோம்.

இதற்கு முதல்வர் நன்றி என கூறினார். இதுபோல் வேறு ஏதாவது தேவை உள்ளதா எனவும் எங்களிடம் கேட்டறிந்தார். முதல்வரை சந்திக்க கிடைத்த இந்த வாய்ப்பை எப்போதும் மறக்க மாட்டேன். என்றார். திருப்பூரை சேர்ந்த அகிலா கூறும்போது, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஒவ்வொருவாிடமும் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எத்தனை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறீர்கள்? என கேட்டார். குடும்பம் குறித்தும் விசாரித்தார்.

குழந்தைகள் உள்ள தொழிலாளர்களிடம் காலை உணவு திட்டம் குறித்து கேட்டறிந்தார். கல்லூரி படிக்கும் பிள்ளைகள் உள்ளவர்களிடம் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்தும், இந்த திட்டங்கள் எந்த அளவுக்கு பயனாக இருந்தது? எனவும் கேட்டறிந்தார். விடியல் பயணம் மேற்கொள்கிறவர்களிடம் பஸ்சில் நடத்துநர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? எனவும் கேட்டார்’’ என்றார்.

Related Stories: