கடலூரில் விஜய் பிரசாரம்; 3வது முறையாக ரத்து: திருச்சியில் இன்று ரோடு ஷோ

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் நாளை மறுதினத்துடன் (21ம் தேதி) நிறைவு பெறுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடலூர் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதியும், அதன்பின்னர் 11ம் தேதியும் பிசார பயண திட்டம் அறிவித்து, கடைசி நேரத்தில் ரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து இன்று (19ம் தேதி) கடலூருக்கு விஜய் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் ஹெலிகாப்டர் தரையிறங்க ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று அவரது கடலூர் பிரசாரம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையம், காவல்துறை அனுமதி வழங்கியும் 3வது முறையாக அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தவெக வேட்பாளர், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இன்று விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார். கடந்த 2ம்தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், அன்றே மரக்கடையில் பிரசாரம் செய்தார். இதை தொடர்ந்து விஜய் இன்று (19ம்தேதி) திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் திருச்சி வருகிறார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்த வாகனத்தில் நின்றபடியே பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து விமான நிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை ரோடு ஷோ நடத்துகிறார்.

Related Stories: