1979ல் இருந்து ஸ்டார்ட் பண்ணுவோமா? எடப்பாடிதான் வீதியில நடமாட முடியாது: செங்கோட்டையன் பதிலடி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் துரோகத்திற்கு என ஒருவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வழங்க வேண்டும். அவர் தகுதியை விட்டு இது போன்ற பேச்சுகளை பேசி இருக்கிறார். வேதனை தரக்கூடிய ஒன்று. இதை மக்கள் பார்த்து கொள்வார்கள். மக்கள் கொந்தளித்து இருக்கிறார்கள்.

அது எடப்பாடி பழனிசாமிக்கு புரியாது. கோபிசெட்டிபாளையத்தில் எவ்வளவு கோபத்தோடு உரையாற்றி இருக்கிறார் என மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு மேல் அவரைப்பற்றி சொல்வது சரியாக இருக்காது. காலம் தான் பதில் சொல்லும். பொறுத்திருந்து பாருங்கள். வீதியில் எடப்பாடி பழனிசாமி தான் நடமாட முடியாது.

எடப்பாடி பற்றி பேச வேண்டுமென்றால் 1979ல் ஆரம்பித்தால் தாங்க மாட்டார். எப்படி என் இடத்தில் வந்தார். எந்த வகையில் நின்றார், எங்கெங்கே என்ன செய்தார். சொல்ல முடியாது. சொல்ல தேவையில்லை. சொல்ல தேவையை உருவாக்கினால் மக்கள் தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘நான் இல்லன்னா அவர் முதல்வர் கிடையாது’
அமைச்சர் பதவிக்கு கண்ணீர் விட்டு அழுதீர்கள் என்று எடப்பாடி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘‘இவர் எங்க அமைச்சர் பதவி தருவது. சட்டமன்ற உறுப்பினர் இல்லையென்றால் இவர் எப்படி முதலமைச்சர் ஆவார். நாங்கள் ஆதரிக்கவில்லை என்றால் முதலமைச்சராகி இருக்க முடியாது.

முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தவன் நான். என்னிடத்தில் எவ்வளவு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் என்பது அவருக்கு தெரியும். அதையெல்லாம் புரிந்து கொண்டு பேச வேண்டும். நான் ஆதரிக்கவில்லையென்றால், கையெழுத்து போடவில்லையென்றால் அவர் முதலமைச்சராகி இருக்கவே முடியாது. அவருக்கு அவ்வளவு தான் அரசியல் நாகரிகம்’’ என்றார்.

Related Stories: