33% இட ஒதுக்கீட்டு மசோதாவில் பெண்களுக்கு அநீதி இழைத்திருப்பது பாஜ தான்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: நாடாளுமன்ற திமுக அணி குழு தலைவர் கனிமொழி எம்பி, டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் பாஜவால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி அடைந்திருப்பது, தமிழ்நாட்டிற்கும், தென்னிந்திய மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் delimitationக்கு எதிராக, தென்னிந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி இருந்தார்.

அதேபோல் பல்வேறு மாநில முதலமைச்சர்களை, சென்னைக்கு அழைத்து மாநாட்டையும் நடத்தினார். இந்த பிரச்னை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து இடங்களிலும் பேசி வருகிறார். தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவையும், 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவையும் ஒன்றாக கொண்டு வந்தது, பாஜ பெண்களுக்கு எதிராக தீட்டிய சதி திட்டம். ஆனால் எதிர்க்கட்சிகள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றாக நின்று முறியடித்துள்ளோம். இது தேர்தலுக்கான களப்பிரச்னை இல்லை என்றாலும், இந்த மசோதாவிற்கு அதிமுக துணைபோயுள்ளது.

இதன் மூலமாக தென்னிந்திய மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்படுபவர்கள் யார் என்பது அடையாளம் காட்டப்பட்டுள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவில், பெண்களுக்கு அநீதி இழைத்திருப்பது பாஜ தான். இப்போது இருக்கக்கூடிய எண்ணிக்கையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜ கொண்டு வர வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. தற்போதைய எண்ணிக்கையிலேயே பெண்களுக்கு இடம் தராமல், புதிதாக மறுசீரமைப்பு செய்த பின்புதான் இடம் தருவோம் என்று பாஜ சொல்வதே பெண்களை இழிவு படுத்துவது போன்றுதான். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவோடு சேர்த்து பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவையும் ஒன்றாக கொண்டு வருவது பாஜ பெண்களுக்கு இழைக்கும் அநீதி. இவ்வாறு கனிமொழி கூறினார்.

Related Stories: