சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசார பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக நடிகையும், சமூக ஆர்வலருமான ரோகிணி பிரசாரம் செய்து வருகிறார். பழனி சட்டமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாண்டி என்பவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ரோகிணி, பின்னர் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல வகையான கனிம வளங்கள், தாதுக்கள் உள்ளது. இங்குள்ள வளங்களை கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிடுவார்கள். தாதுக்களை கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களை இங்கே அனுப்புவதே ஒன்றிய அரசின் வேலை. ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அதை ஒருபோதும் அனுமதிக்காது.
நாம் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கூட்டணி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் தாயுள்ளத்துடன் கூடிய பல நலத்திட்டங்களை தந்துள்ளார். 2026 தேர்தலிலும் ஜெயித்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர்வார். மு.க.ஸ்டாலின் நல்லாட்சிக்கு அவர் கொண்டு வந்த திட்டங்களே சாட்சியாக உள்ளது. என்னை நெகிழ வைத்த மிகவும் கவர்ந்த திட்டம் காலை உணவு திட்டம். அதேபோல் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி கனவை நனவாக்கியது. பெண்கள் கல்வி கற்பதற்கான வசதிகளை செய்து கொடுத்து, அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது.
இத்தகைய நல்ல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல்வரின் ஆட்சி தொடர்வது தான் சிறந்தது. ஒரு தாயாக வேலைக்குச் செல்லும்போது தனது குழந்தை சாப்பிட்டதா என்ற கவலை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும். அந்த கவலையை போக்கி, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் நம் முதல்வர். 99 வயது மூதாட்டிக்கு அரிசி வழங்குவது முதல் ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கு உணவு தருவது வரை இந்த அரசு காட்டும் கனிவுதான் இதன் அடையாளம்.
எந்த சாமானிய மனிதனுக்கு பிரச்னை என்றாலும் முதலில் வந்து நிற்பவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் தான். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். பிளவுவாத சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.
நான் எங்கே ஓட்டு கேட்டு சென்றாலும், ‘எங்கள் ஓட்டு கம்யூனிஸ்ட் தோழருக்குதான்’ என்கிறார்கள்.
எங்கே போனாலும் திமுகவின் மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டத்தை பற்றி பேசுகிறார்கள். அதிலும், 8000 ரூபாய் கூப்பன், மகளிருக்கு ரூ.2000 உரிமைத்தொகையை உயர்த்தி வாக்குறுதி தந்துள்ளதை பற்றி அதிகமாக மக்களிடம் என்னிடம் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள். ஒருசிலர் கம்யூனிசம் சித்தாந்தம் சரியில்லை என்கிறார்கள். அப்படி சொல்பவர்கள், அந்த சித்தாந்தம் என்னவென்று தெரிந்துதான் பேசுகிறார்களா என்பது தெரியவில்லை. எளியவர்கள் பக்கம் நிற்பதே கம்யூனிச சித்தாந்தம், இதை எப்படி தவறு என்று சொல்வார்கள்?
* விஜய்க்கு எதுவும் தெரியவில்லை
நடிகர் விஜய்யை பொறுத்தவரை, அவர் செல்லும் இடங்களில் கூட்டம் சேருகிறது. நான் ஒரு சாதாரண நடிகை. ஆனால் எனக்கே கூட்டம் வருகிறது. காரணம், சினிமா மோகம் என்பது காலம் காலமாக இருப்பது. அதனால் விஜய்க்கு கூட்டம் வரலாம். ஆனால், ஒரு நல்ல தலைவர் என்பது விஜய்யின் பேச்சின் மூலமும் எனக்கு தெரியவில்லை. எந்த தொகுதிக்கு சென்றாலும், அந்தந்த தொகுதியின் பிரச்னைகளை அவர் பேசுவதில்லை. அவருக்கு அரசியல் புரிதலும் இல்லை. தவெக வேட்பாளர்கள் யாரும் விவாத மேடைகளில் கலந்து கொண்டதில்லை. தொகுதி பிரச்னைகளையும் அவர்கள் பேசுவதில்லை. மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவருமே இதுபோன்ற விவாத மேடைகளில் கலந்து கொண்டு, விவாதிக்கிறார்கள். அப்படியென்றால் தங்கள் தொகுதி பற்றிய புரிதல் தவெக வேட்பாளர்களுக்கு இல்லை என்றுதான் அர்த்தம்.
