சென்னை: தொகுதி நிர்வாகிகளை சந்திக்க பெரம்பூர் தேர்தல் பணிமனைக்கு தவெக தலைவர் விஜய் சைலண்ட் விசிட் அடித்த நிலையில் வெட்டி பந்தா இல்லாததால் டிராபிக் இல்லை, சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். நேற்று மாலை 5.15 மணியளவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி நகர் ஜவகர் தெருவிற்கு சைலண்டாக காரில் வந்த விஜய் 5.45 மணி வரை தேர்தல் பணிமனையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பெரம்பூர் மாவட்ட தலைவர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வழக்கமாக பயன்படுத்தும் கார் இல்லாமல் வேறு ஒரு காரில் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் விஜய் வந்ததால் யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர், கட்சி அலுவலக வாயிலில் பெண்களுடன் விசில் கோலம் வரைந்துவிட்டு சைலண்டாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ஒவ்வொரு முறையும் விஜய் வெளியே வரும்போது கடும் கூட்ட நெரிசல், விபத்து, கரூரில் 41 பேர் உயிரிழந்தது போன்ற பல அசம்பாவிதங்கள் நடந்தது.
ஆனால், நேற்று பெரம்பூருக்கு அவர் வந்து சென்ற போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. இதிலிருந்து கூட்டத்தை திட்டமிட்டு தவெகவினர் சேர்க்கிறார்கள் என்பதும் எந்தவித ஆடம்பரமும் இன்றி விஜய்யால் வந்து போக முடியும் என்றால் இதை கரூரில் உயிரிழந்த பொதுமக்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவாவது அவர் இவ்வாறு சென்று இருக்கலாம் என நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
