×

மேட்ச் பிக்சிங் நடந்ததா?: ராஜஸ்தான் மேலாளருக்கு பிசிசிஐ நோட்டீஸ்

மும்பை: ஐபிஎல்லில் ஆடிவரும் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தருக்கு, ஊழல் தடுப்பு விதி மீறல் தொடர்பாக பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐபிஎல் 19வது தொடரில் ஆடிவரும் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ், 4 போட்டிகளில் ஆடி 4லும் வென்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் அணி, கடந்த வெள்ளிக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஆடியது. அப்போது, மாற்று வீரர்கள் அமரும் டக்அவுட் பகுதியில் ராஜஸ்தான் அணி இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அருகில் அமர்ந்திருந்த அந்த அணியின் மேலாளர் ரோமி பிந்தர், செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. ஐபிஎல் ஊழல் தடுப்பு விதிகள் படி, டக்அவுட் பகுதியில் மொபைல் போனை பயன்படுத்துவது தவறு. எனவே, இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேட்ச் பிக்சிங் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சமூக வலைதளத்தில் பலர் வலியுறுத்தி வந்தனர். ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியும், இத்தகைய கோரிக்கை ஒன்றை சமூக வலைதளம் மூலம் முன்வைத்தார். இந்நிலையில், ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி, ரோமி பிந்தருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : BCCI ,Rajasthan ,Mumbai ,Romi Pinder ,Rajasthan Royals ,IPL ,
× RELATED 19 ஆண்டு கால ஐபிஎல்லில் முதல் முறை...