கிராம தெய்வங்கள் வடக்கு நோக்கிதான் உட்கார்ந்திருக்கும் தமிழ்நாட்டுக்கு ஆபத்து வடக்கில் இருந்துதான் வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டின் கிராமத் தெய்வங்கள் வடக்கு நோக்கிதான் உட்கார்ந்திருக்கும். தமிழ்நாட்டுக்கு ஆபத்து வடக்கில் இருந்துதான் வரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவள்ளூரில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு எப்போதுமே தனித்துவமான மாநிலம், அதற்குக் காரணம், திமுக உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் பெரும்பாலும், தமிழ்நாட்டின் கிராமத் தெய்வங்கள் வடக்கு நோக்கிதான் உட்கார்ந்திருக்கும், ஏன் என்றால், தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். அப்படி, எதிர் வரும் என்டிஏ என்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் தேர்தல்தான், இந்தத் தேர்தல், தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும்.

பழனிசாமி எனும் அடிமை இருக்கும் தைரியத்தில்தான், “அ.தி.மு.க.வை வைத்து, என்டிஏ ஆட்சி நடத்துவோம், இந்தியை திணிக்கும் மும்மொழித் திட்டத்தை செயல்படுத்துவோம்” என்று பா.ஜ.வினர் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும். அடிமைகளை விரட்ட வேண்டும். அதற்கு, நீங்கள் அனைவரும் ரெடியா?. இந்த வேட்பாளர்களுக்கு நீங்கள் செலுத்தும் வாக்கு என்பது, டெல்லி ரிமோட் கண்ட்ரோலுக்கு இங்கு சிக்னல் கிடைக்காது, கண்டிப்பாக, என்டிஏவுக்கு நீங்கள் நோ எண்ட்ரிதான் என்பதை காட்ட வேண்டும், அப்போதுதான், நம்முடைய திராவிட மாடலில் செய்திருக்கும் திட்டங்கள் அனைத்தும், தடையில்லாமல் கிடைக்கும்.

கூவத்தூரில் தவழ்ந்து, ஊழலில் திளைத்து, உரிமைகளைத் தொலைத்து, தமிழ்நாட்டை நாசப்படுத்திய பழனிசாமியின் ஆட்சியில் என்ன வளர்ச்சி? 0.07 விழுக்காடு வளர்ச்சி அதாவது, வளர்ச்சியே நின்றுவிட்டது. ஆனால், இன்றைக்கு, 11.19 விழுக்காடு வளர்ச்சி இந்தியாவுக்கே ரோல் மாடல் இது, தமிழ்நாடு என்று தலைநிமிர்ந்து கம்பீரமாக சொல்லும் அளவுக்கு, ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். மகளிர் உரிமைத்தொகையைக் கொடுத்து, அவர்கள் தேவைகளுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்தோம். பெண்கள் அனைவரும் எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் சீர் என்று, அந்த உரிமையை பெருமையுடன் எடுத்துக் கொண்டார்கள்.

இதெல்லாம், பழனிசாமிக்கு பர்னால் தடவும் அளவுக்கு எரிச்சலை கொடுத்தது. இந்தத் திட்டங்களையும் பயனடையும் பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசினார். அதற்கான பரிசாகத்தான், பத்து தோல்வி பழனிசாமி என்ற பட்டப்பெயருடன் இருக்கிறார் அந்தப் பெயரை, 11 தோல்வி பழனிசாமி என்று அப்டேட் பண்ணிவிடலாமா? வாய்க்கொழுப்புடன், அசிங்கமாக அவதூறாக பேசிக் கொண்டு இருக்கிறார். ஒரு காமெடியில் வரும், “அடித்து கேட்டால்கூட சொல்ல மாட்டான்” என்பது போன்று, எவ்வளவு முறை கேட்டாலும் தன்னுடைய அரசு செய்த சாதனைகளை இதுவரைக்கும் சொல்லவே இல்லை. ஆனால், உங்கள் முன்னால் நிற்கும் இந்த ஸ்டாலின், கம்பீரமாக சாதனைகளை புள்ளிவிவரங்களுடன் சொல்கிறேன்.

தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று சொன்னது, ஆர்.என்.ரவி என்ற தனிநபரின் குரல் மட்டும் அல்ல அது, பா.ஜ.வின் குரல். பின்னால் இருந்து இயக்கும், ஆர்.எஸ்.எஸ்.சின் குரல், அதுமட்டுமல்ல, பா.ஜ.வினர் என்னவெல்லாம் பேசினார்கள். தமிழ்நாடு பெயரை மட்டுமல்ல, நாங்கள் நினைத்தால், தமிழ்நாட்டையே இரண்டாக உடைப்போம். அந்த பவர் எங்களுக்கு இருக்கிறது என்று திமிராக பேசினார்கள். சவால்விட்டு சொல்கிறேன், இந்த ஸ்டாலின் உயிரோடு இருக்கும் வரைக்கும் தி.மு.க. இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

தைரியம் இருந்தால், தமிழ்நாட்டுக்கு தட்சிணப் பிரதேசம் என்று பெயர் வைப்போம் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அனைவரும், அடிமைசாமி போன்று வாய்மூடிக் கொண்டு இருக்க மாட்டோம். நாங்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர்கள், இப்போது தேர்தலுக்காக வந்த பா.ஜ.., தமிழ்நாட்டில் இப்போது என்ன பேசுகிறார்கள்? அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும், அது என்டிஏ கூட்டணி அரசாகத்தான் இருக்கும். மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

யாரோ ஒருவர் வாய் தவறி பேசிய பேச்சு அல்ல இது, ஒன்றிய அமைச்சர்களாக இருக்கும் பியுஷ் கோயல், தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே என்று அனைவரும் இதையேதான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நான் கேட்கிறேன், இதைக் கண்டித்து, பழனிசாமி வாயிலிருந்து, ஒரே ஒரு வார்த்தையாவது வந்திருக்கிறதா? ஆமாம்சாமி போட்டு, அடிமை சாமியாக இருக்கும் பழனிசாமிக்கு, இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க, முதுகெலும்பு இருக்கிறதா? பழனிசாமியும், பழனிசாமிக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ். சாமிகளும் என்ன திட்டம் போட்டாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.

ஒடிசா மாநிலத்தில் வாக்கு வாங்க வேண்டும் என்று, தமிழர்களை திருடர்கள் என்று சொல்கிறீர்களே, இது என்ன நியாயம் என்று பழனிசாமி பொங்கி எழுந்தாரா? மதுரை-கோவைக்கு மெட்ரோ ரயில் தர மாட்டோம் என்று அடாவடி செய்கிறார்களே, பழனிசாமிக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததா? பத்து வருடத்திற்கும் மேல், செங்கல் செங்கல்லாக எய்ம்ஸ் மருத்துவமனையை இன்னும் கட்டுகிறார்களே என்று பழனிசாமிக்கு ஆத்திரம் வந்ததா? விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பழனிசாமி எதாவது கொந்தளித்தாரா? குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, பழனிசாமி கோபப்பட்டாரா? இப்போதுகூட, மும்மொழிக் கொள்கை என்று பேசும் பா.ஜ.வை எதிர்த்து போராடினாரா? தமிழ்நாட்டை பாதிக்கும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து பழனிசாமி என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா?

கிறிஸ்தவர்களுக்கு எதிராக எப்.சி.ஆர்.ஏ சட்டம் இப்போது கொண்டுவரப் போகிறார்கள், அதை எதிர்த்து பழனிசாமி பொங்கி எழுந்தாரா?, பொதுசிவில் சட்டம் என்று பேசுகிறார்களே, அதை பழனிசாமி தட்டிக் கேட்டாரா?, இப்படி தமிழ்நாட்டிற்காகவும் – தமிழ்நாட்டு மக்களுக்காகவும் எந்தக் குரலையும் எழுப்பாமல், எந்த முகத்துடன் வெட்கமில்லாமல் வாக்கு கேட்டு வருகிறார் பழனிசாமி?, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.விற்கு பல்லக்கு தூக்குகிறீர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, கொஞ்சமாவது சூடு சுரணை சுயமரியாதை இருக்க வேண்டாமா உங்களுக்கு?.

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியைக் கொடுத்து விரட்ட வேண்டும். டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என்று சொல்லிக் கொண்டு இருக்கும், டெல்லியின் கண்ட்ரோலுக்கு அடிமைகளாக இருப்பவர்கள் தமிழ்நாட்டில் ஆளக் கூடாது, எனவே, தமிழ்நாடு வெல்ல, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். கணக்கு போட்டு காய்களை நகர்த்துபவர்கள், ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டு மக்களின் கணக்கு என்றைக்குமே தப்பாது. பா.ஜ.வின் ஆணவத்திற்கும் – அ.தி.மு.க.வின் துரோகங்களுக்கும் ஒருசேர முடிவுரை எழுதுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு வெல்ல, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். கணக்கு போட்டு காய்களை நகர்த்துபவர்கள், ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்களின் கணக்கு என்றைக்குமே தப்பாது. பா.ஜ.வின் ஆணவத்திற்கும் – அ.தி.மு.க.வின் துரோகங்களுக்கும் ஒருசேர முடிவுரை எழுதுவோம்.

திருவள்ளூர் என்றாலே நினைவுக்கு வருவது டானியாதான்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘திருவள்ளூர் மாவட்டத்துக்கு போகிறோம் என்று சொன்னதும், எனக்கு முதலில் நினைவுக்கு வந்த பெயர் டானியா. நாசருக்கு தெரியும், தொடர்ந்து இரண்டு நாட்களாக டி.வி.யில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், சோசியல் மீடியாவிலும் பார்த்தேன். அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைதான் டானியா என்ற சிறுமி, ஆவடி, வீராபுரத்தில் இருக்கிறார்கள். அந்தக் குழந்தையை, என் குழந்தையைப் போன்று கவனித்து, பெரிய ஆபரேஷன் செய்து, அவர்கள் முகத்தில் அழகான புன்னகை தோன்றுவதைப் பார்த்துப் பார்த்து இன்றைக்கும் நான் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.

இங்கு இருக்கிறாரே நாசர், அவருக்கு எத்தனை முறை போன் செய்து அந்தக் குழந்தையைப் பற்றி விசாரித்தேன் என்று அவருக்குத் தெரியும். அந்தக் குழந்தை, “நான் படித்து, டாக்டராகி, என்னைப் போன்று இருப்பவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிப்பேன்” என்று சொன்னபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை “எல்லாருக்கும் எல்லாம்” “அனைவரும் சமம்” என்று வாய் வார்த்தைக்காக சொல்பவன் அல்ல, இந்த ஸ்டாலின். “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்று செயல்களில் காண்பிப்பவன்.

அதேபோன்று, ஆவடி பருத்திப்பட்டில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யா, ப்ரியா, தர்ஷினி என்ற மூன்று மாணவிகள் அவர்கள் படிக்கும் பள்ளிகளில், தாங்கள் சந்திக்கும் பாகுபாடுகளைச் சொல்லி, வீடியோ வெளியிட்டிருந்தார்கள். நான் சோசியல் மீடியாவில் பார்த்தேன். சமூகத்தின் இந்த மனநிலையை உடைக்க வேண்டும் என்று அப்போதே நினைத்த நான், உடனே நாசரை அழைத்தேன், விசாரித்தேன், அவர்கள் வீட்டுக்கே நேராகச் சென்றேன். அங்கு சென்று, அவர்கள் அன்பாக கொடுத்த உணவைச் சாப்பிட்டு, இங்கு அன்பும், சமத்துவமும் மட்டும்தான் நிலைக்கும் என்று காட்டினேன்’’ என்றார்.

* திருவள்ளூருக்கு செய்த திட்டங்கள்
இந்த திருவள்ளூர் மாவட்டத்துக்கு செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை மட்டும் தலைப்புச் செய்திகளாக சொல்ல வேண்டும் என்றால், திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம், திருத்தணியில் புதிய பேருந்து நிலையம், குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம், சின்ன நொளம்பூரில் உயர்மட்டப் பாலம், ரூ.173 கோடியில், பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில் திருப்பணிகள், ரூ.183 கோடியில், திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயில் திருப்பணிகள், ரூ.52 கோடியில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் திருப்பணிகள், ரூ.18 கோடியில், சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோயில் திருப்பணிகள், மாநல்லூரில் மின் வாகனப் பூங்கா, திருவொற்றியூரில் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள், பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம், கவரப்பேட்டை – சத்தியவேடு சாலைப் பணிகள், திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவுசார் நகரம், திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம், பொன்னேரி – கவரப்பேட்டை இடையே ரயில்வே மேம்பாலம், பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகள், 60 சிறுபாலங்கள் அமைத்திருக்கிறோம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* திறமையிருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு திராவிட மாடல்தான் சிறந்த எடுத்துக்காட்டு
திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த பிப்ரவரி மாதம், பனப்பாக்கம் சிப்காட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும், டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட்-ரோவர் நவீன வாகன உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தேன். தொடங்கி மட்டுமா வைத்தேன்… அங்கு தயாரிக்கப்பட்ட முதல் ரேஞ்ச்ரோவர் காரில், டாடா குழுமத் தலைவரைப் பக்கத்தில் உட்கார வைத்து, நானே கார் ஓட்டி இருக்கிறேன். அதையெல்லாம் பார்த்தீர்களா?

இந்தத் தொழிற்சாலை வந்ததால், உலகமே இன்றைக்கு ராணிப்பேட்டையை உற்று நோக்க தொடங்கியிருக்கிறது. அதுமட்டுமா, பனப்பாக்கம் சிப்காட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் தைவான் கம்பெனியின் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினேன். இதில் ஒரு சிறப்பம்சம் என்ன என்றால், 85 விழுக்காடு கிராமப்புற பெண்களுக்குதான் இங்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் இதுபோன்று நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சொல்லித்தான் இன்றைக்கு வாக்குகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு மாவட்டத்தையும் வளர்த்த காரணத்தால்தான், ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தயவு இல்லாமலேயே இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.

பா.ஜ.க. அரசு பல ஆயிரம் கோடிகளை வாரி வழங்கியும், அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களால் இந்த வளர்ச்சியைக் காண்பிக்க முடியவில்லை. நம்முடைய வீடுகளில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், “படிக்கிற புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்” என்று சொல்லுவார்கள். அதுபோன்று, திறமையிருந்தால் தடைகளை மீறியும் சாதிக்கலாம் என்பதற்கு திராவிட மாடல்தான் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைக்கு விளங்குகிறது! “தமிழ்நாடு வளர்ந்தால், அது இந்தியாவுக்கான வளர்ச்சிதானே” என்று பா.ஜ.க. நினைக்கவில்லை. அந்த அளவுக்கு நம்முடைய வளர்ச்சி மீது பொறாமை! இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: