இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த `தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த `தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்: புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளுடன் கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும், மனநிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக இவ்வாண்டு அமையட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி நிறையட்டும். எண்ணங்கள் ஈடேறுவதுடன் அனைவரின் முயற்சிகளும் வெல்லட்டும்.

வைகோ(மதிமுக): சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞரும், எண்ணற்ற லட்சிய வேங்கைகளும் வியர்வையும், கண்ணீரும், ரத்தமும் சிந்தி பாதுகாத்த திராவிட இயக்கக் கோட்டையை வீழ்த்தலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு மமதையோடும், ஒன்றிய அரசின் அகங்காரத் திமிரோடும் தமிழகத்தில் நுழைய முனையும் சனாதன இந்துத்துவா சக்திகளை முறியடிக்க வேண்டும். ஒன்றிய அரசின் ஆதிக்கப் பிடிகளை முறிக்கவும், சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தந்து, இத்தேர்தலுக்குப் பின்னரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் நல்லாட்சி தொடர திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய உறுதி எடுப்போம். தமிழகத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற உணர்வுடன் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதை பல தலைமுறைகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு பேராபத்து ஏற்படுகிற வகையில் ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.சமீப காலமாக தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சார, பண்பாட்டின் மீதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒன்றிய பாஜ அரசு கடுமையான படையெடுப்பை நடத்தி வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதற்கு வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழர்களுக்கு சித்திரை வருடப்பிறப்பு வசந்த காலத்தின் தொடக்கமாக அமைந்து தொன்மையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. நாளை தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் அடியெடுத்து வைக்கும் தமிழக மக்களுக்கு இனி வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும். விவசாய தொழில் மேம்பட மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர இப்புத்தாண்டு நல்வழி காட்டட்டும். தமிழர்களின் கலாச்சாரத்தோடு இணைந்த சித்திரை வருட பிறப்பில் தமிழர்கள் இறைவனை வழிபட்டு, இயற்கையைப் பாதுகாத்து, புது முயற்சியை மேற்கொண்டு வாழ்வில் சிறக்க இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமணி (பாமக): சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும். வெயிலைக் கொடுக்கும் சித்திரை தான் நடப்பாண்டில் நமக்கு வெற்றிகளையும் வழங்கப் போகிறது. சித்திரை மாதத்தின் தொடக்கமான இந்த நாள் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும்.

எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கட்சி): சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வசந்தகாலத்தின் தொடக்கமாகவும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் சித்திரை மாதம் நமக்கு வசந்தகாலமாக அமையட்டும். தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும் என்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: