சென்னை: பாஜ ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பதற்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையே சாட்சி என்றும் திமுக தலைமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2023ம் ஆண்டில் தேசிய அளவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அந்த புள்ளி விவரங்கள்படி தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் மிகவும் குறைவாகும். அதாவது தமிழ்நாட்டில் 8,943 மட்டுமே. ஆனால், பாஜ ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. இந்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் 66,381 பெண்கள் பாதிக்கப்பட்டனர், மகாராஷ்டிரா மாநிலத்தில் 47,101 பெண்கள் பாதிக்கப்பட்டனர், ராஜஸ்தான் மாநிலத்தில் 45,450 பெண்கள் பாதிக்கப்பட்டனர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 32,342 பெண்கள் பாதிக்கப்பட்டனர், ஒடிசா மாநிலத்தில் 25,914 பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
பீகார் மாநிலத்தில் 22,962 பெண்கள் பாதிக்கப்பட்டனர், அரியானா மாநிலத்தில் 15,758 பெண்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டைவிட பாஜ ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் பெண்களுக்கும் அதிக அளவில் குற்றங்கள் இழைக்கப்பட்டு, பெண்கள் சமுதாயம் பாதுகாப்பின்றி உள்ளது என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெளிவாகச் சொல்லுகின்றன. 2016 முதல் 2018 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு அவர்கள் கட்சியினரே இழைத்த படுபாதகச் செயல்களை மறைத்துவிட்டு பேசுகிறார்கள். அந்த அதிமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள், என 200 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிராக குற்றங்கள் மிக அதிக அளவில் நிகழ்ந்தன.
அதை பத்திரிகைகள் எல்லாம் வெளிப்படுத்திய நிலையில், அந்தக் குற்றவாளிகளை எல்லாம் காப்பாற்ற முயற்சி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு மனச்சாட்சி என்பதே இல்லையா? அந்தச் சம்பவத்தில் 9 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சாகும் வரை ஆயுள்தண்டனை அளித்ததே மறந்துவிட்டார்களா ? இவைபோல, அதிமுக ஆட்சிக் காலத்து பெண்களுக்கு எதிரான கொடுமைகளை மறைத்துவிட்டு, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுவது மனச்சாட்சி அற்றவர்கள் அவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது அல்லவா ? இவைபோல இன்னும் எத்தனையோ உண்டு. சொன்னால் பட்டியல் நீளும். இது தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறு நினைவூட்டல்தான். பாஜக-அதிமுக கூட்டணியினர், அவர்கள் ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளை தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
