விஜய்க்கு வந்த சோதனை: டிவிகேக்கும், டிவிகேக்கும் சண்டை பெரம்பூரே வேடிக்கை பார்க்குது! தலையை பிச்சிக்கும் தேர்தல் அதிகாரி

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பிக்கும் போது அதனை டிவிகே என அவரது தொண்டர்கள் சுருக்கமாக அழைத்தனர். இதற்கு ஏற்கனவே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுருக்கமும் டிவிகே என்பதால் எங்களது கட்சியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள், என ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிடுவதால் அவரது தொண்டர்கள் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தினமும் வாக்கு சேகரிக்கும்போது டிவிகே கட்சிக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியும் பெரம்பூரில் டிவிகே கட்சிக்கு வாக்களியுங்கள் என வாக்கு கேட்டு வருகின்றனர். இதனால் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் வழக்கறிஞர்கள் பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் டிவிகே என்பதை பயன்படுத்தக்கூடாது. நாங்கள்தான் உண்மையான டிவிகே என புகார் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரியில் உள்ள பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரம்பூர் வேட்பாளர் வேணுகோபால் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘2013ம் ஆண்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தொடங்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் கட்சி பதியப்பட்டு தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2024ல் தான் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. உண்மையான டிவிகே நாங்கள் தான். தமிழக வெற்றிக் கழகம் டிவிகே என்பதை பயன்படுத்த கூடாது, என 2024ல் புகார் அளித்துள்ளோம். எனவே, தமிழக வெற்றிக் கழகம் டிவிகே என பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம்’ என்றார். ஏற்கனவே, இதுகுறித்த வழக்குகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளதால், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் யார் டிவிகே என்ற பெயரை பயன்படுத்துவது என்பதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் தீர்வு காணப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

* சுந்தர்.சி மீது வழக்குப்பதிவு
மதுரை தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் ராம.சீனிவாசனை ஆதரித்து பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், நேற்று முன்தினம் பழையகுயவர்பாளையம் பகுதியில் ரோடு ஷோவில் ஈடுபட்டார். இந்த ரோடு ஷோவை முன் அனுமதியின்றி டிரோன் மூலம் படம் பிடித்த திருவாதவூரை சேர்ந்த குமரேசன் (28) என்பவர் மீது தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதியை மீறி பட்டாசு வெடித்ததாக பாஜ கட்சியினர் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல அதிமுக கூட்டணியை சேர்ந்த புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அதிமுக வார்டு செயலாளர் கணேசன் (65) மீதும் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: