கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் கதவை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி அருகேயுள்ள கேர்பெட்டா பகுதி பெரிய சோலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு சமீபகாலமாக உணவு தேடி கரடிகள் குடியிருப்பு மற்றும் சாலைகளில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கேர்பெட்டா பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் கரடி ஒன்று பள்ளியின் கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்து ஆசிரியர்கள் காலை பள்ளிக்கு வந்தபோது கரடியின் அட்டகாசத்தை அறிந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வந்த வனத்துறையினர் கரடி பொருட்களை சூறையாடியதை உறுதி செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து உறுதி செய்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
